மதுரை என்ற சொன்ன அடுத்த நிமிடம் எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வருவது எது?
ஆண்-பெண், சாதி-மதம், நாடு-மொழி, ஆத்திகம்-நாத்திகம் என்று எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு உடனே மனதில் தோன்றுவது எது?
ஒளிக்காமல், மறைக்காமல் சொல்லுங்க பார்ப்போம்!..ஆங்! அதே!
மீனாட்சி!!!
அது எப்படி அம்மா இது?
ஊரைச் சொன்ன மாத்திரத்தில் அனைவர் உள்ளங்களிலும் சிக்கென்று நிறைந்து விடுகிறாய்?
இதே சென்னை, திருச்சி என்று பெரிய பெரிய ஊர்களைச் சொன்னால் எல்லாருக்கும் கபாலியோ இல்லை அரங்கனோ மனதில் வருவது இல்லை!
ஒரே விதிவிலக்கு திருப்பதி! அங்கும் பேரைச் சொன்னாலே போதும் வேங்கடவன் வந்து விடுகிறான்; இப்படி அண்ணனும் தங்கையும் இந்த வித்தையை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டீர்களோ? :-)
சரி, இப்போ மதுரைக்குச் சற்று வெளியில் உள்ள ஒரு பெரிய குளத்துக்குப் போகலாம் வாங்க! வண்டியூர் மாரியம்மன் குளம்!
கூட்டாஞ்சோறு சாப்பிட இதை விட ஒரு நல்ல இடம் கிடைக்குமா? மரங்கள் சூழ்ந்து, சிலு சிலு என்று பசுமையான குளம்!
குளத்தில் தண்ணியே இல்லை! ஒரே பாலா இருக்கு! ஆவின் பால்!!
பசுங்குளம், வெள்ளைக்குளமா மாறிடுச்சா?? இது என்ன ஏதாச்சும் கண்கட்டு வித்தையா?
குமரகுருபரர் என்ற செந்தமிழ்க் கவிஞர் செய்யும் வித்தை இது! எதுக்கு? குழந்தை மீனாளை/அன்னை மீனாளைத் தூங்க வைக்க! பார்க்கலாம் வாங்க!
தென்னன் தமிழின் உடன்பிறந்த
சிறுகால் அரும்பத் தீஅரும்பும்
தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ்
செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை
நம்ம தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின!
அகத்தியர் மலை அல்லவா அது! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதே!
இப்படித் தென்றல் வீச, குளக்கரை மாமரங்களின் மேல் தீ ஜ்வாலை பற்றி எரிகிறது! அடச் சும்மாங்க! மாந்தளிர் சிவந்து இருப்பதால், காற்றில் பறபற என்று ஆடிஆடித், தீ அரும்புவது போல் உள்ளதாம்!
அந்த மர நிழலில் ஒரு மாடு தூங்குகிறது; எருமை மாடு;
இந்தக் காலத்தில் தான் எருமை என்றால் நாமெல்லாம், அதுவும் பட்டிணத்துக்காரங்க, ஒரு மாதிரியா பார்க்கிறோம்! ஆனா அதுவும் பால் தரும் ஜீவன் தானே! சிவந்த கண், பெரிய வாய், இப்போது தான் கன்னு போட்ட (புனிற்று) ஒரு தாய் எருமை!
இன்னம் பசும்புல் கறிக்கல்லா
இளங்கன்றுஉள்ளி மடித்தலம் நின்று
இழிபால் அருவி உவட்டுஎறிய
எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப்
இன்னும் பச்சைப் புல்லைக் கூடக் கடிக்க முடியாமல் உள்ள பச்சிளங் கன்றைப் பார்த்தவுடன், அம்மா எருமைக்கு ஒரே பாசம்.
தானாகவே பால் மடியில் இருந்து சுரக்கிறது. இந்தக் குட்டி என் வயிற்றில் வந்து பிறந்து, சாப்பிடக் கூடத் தெரியாமல் இருக்குதே என்ற ஏக்கம், பாலாகத் தானாய்ச் சுரக்கிறது!
சுப்ரபாதப் பதிவிலும் இதைப் பார்த்தோம். அன்னையிடம் நாமெல்லாம் போவதற்கு முன்பே, நமக்கு என்ன தரலாம் என்று தாயாய் அருள் சுரக்கின்றாள்!
இப்படிப் பால் வழிந்து அருவி போல ஓடுகிறது!
பொய்கையில் (குளம்) உள்ள தண்ணீர் அலைகள் இந்தப் புது பால் அருவியோடு மோதுகின்றன!
பாலும் நீரும் மோதி மோதிக், கடைசியில் குளம் முழுக்க பால்! பாற்கடலோ, பாற்குளமோ என்று நிறைந்து விடுகிறது!
பொன்னம் கமலப் பசுந்தோட்டுப்
பொன்தாதுஆடிக் கற்றை நிலாப்
பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த
பொன்போல் தொடுதோல்அடிப் பொலன்சூட்டு
இந்தப் பாற்குளத்தில் பொன் போல் சிவந்த கமலம் (தாமாரை) பூத்துள்ளது. அதன் இதழில், மகரந்தத் தாதுக்கள் பொடியாய் கண் சிமிட்டுகின்றன;
மேல் இருந்து பார்க்கிறான் சந்திரன். தன் பங்குக்கு மேலும் வெள்ளைக் கதிர்களை வீசுகிறான். Everything is white! நம்ம டிஸ்னி ட்ரீம்லேண்ட் போல!
இதனால் உண்டான அலையில், ஒரு வெள்ளை அன்னம், நீந்திச் செல்கிறது!
(தொடுதோல் அடி=அன்னத்தின் காலில் தோலும் ஒட்டி இருக்கும்; பொலன் சூட்டு=உச்சியில் கொண்டை; கவிஞர் இயற்கையை ரொம்பவே கவனிச்சு எழுதியிருப்பார் போல; காதலிலும் சரி, தாலாட்டிலும் சரி, கற்பனை பிச்சிக்கிட்டுப் போவது ஏனோ :-)
அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு
அரசே தாலோ தாலேலோ
அருள்சூல் கொண்ட அங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோஅன்னம் பொலியும் தமிழ் வளர்த்த மதுரை! அதை ஆள வந்த பெண்ணரசே, தாலே தாலேலோ!
அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி; அழகிய கயல்மீன் கண்ணைக் கொண்டவளே! (
மீனாக்ஷி = மீன+அக்ஷி = மீன்+கண்)
நீயே ஒரு குழந்தை; சூல்=கர்ப்பம்; குழந்தை சூல் கொள்ளுமா?
ஊரில் குழந்தையைக் கொஞ்சும் போது "என்னைப் பெத்த ராசா" என்று சொல்வார்கள்; குழந்தை எப்படி இவர்களைப் பெக்கும்? அதே தான் இதுவும்!!
உன்னைப் பெத்ததால் என் பிறவிக்கே ஒரு பொருள் வந்தது!
உன்னைப் பெற்றதால் என்னை நானே பெற்றவன் ஆனேன்!
அதனால் நீ "என்னைப் பெத்த ராசா"!!
அது போல் அன்பையும் அருளையும் சூல் கொண்டவளே!
என் அமுதமே மீனாட்சீ!
என்னைப் பெற்ற தாயே!
தாலே தாலேலோ!!
(மேற்கண்ட பாடலை நீலாம்பரியில் இசைத்துப் பாடலாம்; கண்கள் தானாகவே சொக்கும்; இது குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்; பிறவியில் வாய் பேச முடியாமல் பிறந்த அவர், பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். பேசும் திறம் மட்டுமா பெற்றார்? நம்மை எல்லாம் பாட்டால் கட்டி, நம்மைக் கட்டிக் காப்பவளையும் அல்லவா பாட்டால் கட்டும் திறம் பெற்றார்!)எல்லாம் சரி!
எதுக்குக் கடவுளைக் குழந்தை ஆக்கணும்? அதற்குப் பிள்ளைப் பாடல் பாடணும்??ஜடாயு ஐயா அவர்கள் இந்தக் கேள்வி எழுப்பி உள்ளார், சென்ற பின்னூட்டத்தில்! ஆழமான அழகிய கேள்வி!! அடுத்த பதிவில் பார்ப்போம்!
ஆனா அதுக்கு முன்னாடி நம்ம "மருத"காரங்களுக்கு ஒரு கேள்வி! அன்னை மீனாட்சி பிறந்த ஊர் எது தெரியுமா?....